Saturday, July 31, 2010

உழைப்பிற்கு ஊதியம் உண்டு

* தேவையுள்ளவன் என்றைக்குமே மறைக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* கோபத்திலிருந்து நீங்கி, உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.
* எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப் பேச்சில் ஒரு பலனும் இல்லை.
*தீய மனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகிப் பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.
* நடுகிறவனும் நீர் பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரிதான்.ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவான்.
* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான். கொள்ளைக்காரனாயுமிருப்பான்.
-பைபிள் பொன்மொழிகள்.
----------------------------
"bharatheeyan"

Wednesday, July 14, 2010

வாழ்க்கையை மீட்டெடுத்த வலிமை மனசுக்காரி..! ம.பிரியதர்ஷினி

[Thanks to Vikatan Group for this article in tamil.]

துன்பக் கடலில் தள்ளிய விதி... துடுப்பாக வந்த ஹோட்டல் தொழில்!
நினைத்துப் பார்க்காத திருப்பங்களும், தீர்மானிக்க முடியாத மேடு பள்ளங்களும் நிறைந்ததுதானே வாழ்க்கை?! பெட்ரிசியாவும் அப்படித்தான்!

காதலித்தவரையே ஆசையாக கை பிடித்தபோது, அந்த வாழ்க்கைதான் இதுவரை அனுபவித்திராத அத்தனை துன்பங்களையும் தனக்குத் தரப்போகிறது என்பதை அறியவில்லை பெட்ரிசியா. 'ஹோட்டல் முதலாளி மனைவி' என்று அந்தஸ்தோடு இருந்தவர், கணவரை விட்டுவிலகி, மெரீனா பீச்சில் டீ, சமோசா, கட்லெட் விற்கப்போகிறார் என்பதையும் காலம் முன்கூட்டியே அவருக்குச் சொல்லவில்லை.


ஆனால், அதையெல்லாம் மீறி, படிப்படியாக முன்னேறி குடிசை மாற்றுவாரிய அலுவலக கேன்டீன், பேங்க் ஆஃப் மதுரை கேன்டீன், நேஷனல் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் போர்டு மேனேஜ்மென்ட் கேன்டீன் என்று ஆர்டர் எடுத்து முன்னோக்கி வந்தபோது, மகளின் திடீர் மரணம் அவரை மீண்டும் சிதைத்துப் போடும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை.

என்றாலும், காலம் அவரை மெள்ளத் தேற்ற, மீண்டெழுந்து வந்து... இதோ... இன்று சென்னையின் முக்கிய இடங்களில் பரபரவென கமகமத்துக் கொண்டுஇருக்கும் 'சந்தீபா' ஹோட்டல்'களின் நிறுவனராக, கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சங்கள் அள்ளிக்குவிக்கும் தொழிலதிபராக அவர் உயர்ந்து நிற்கிறார். இப்படி அவர் உயர்வார் என்று, இதுநாள் வரை, அவரைத் துரத்திக் கொண்டே இருந்த விதி, நிச்சயமாக நினைத்திருக்காது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், பணக்காரத் தன்மையை காண்பிக்கும் பங்களாக்கள் உள்ள அந்தத் தெருவில்... பிரமாண்டமாக நிற்கிறது பெட்ரிசியாவின் பங்களா. எளிமையான புன்னகையுடன் ஆரம்பித்தார்...

''எங்க அப்பா, அம்மாவுக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை. நான், தம்பி, தங்கச்சிங்கனு ரொம்ப கட்டுப்பாடான, அதேசமயம், பாசமான குடும்பம் எங்களோடது. சென்னையில எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டலுக்கு என் ஃப்ரெண்ட்ஸோட அடிக்கடி சாப்பிடப் போவோம். காலம் அந்த ஹோட்டல் ஓனரை காதலிக்க வச்சது. ரெண்டு வீட்டுலயும் பயங்கற எதிர்ப்பு. அதை மீறி கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அப்போ பி.ஏ. செகண்ட் இயர் படிச்சுட்டிருந்த நான், ரொம்ப வருத்தத்தோட அதை டிஸ்கன்டினியூ பண்ணினேன். ஆனா, 'கணவரோட சேர்ந்து அழகான வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறோம்...'ங்கற சந்தோஷம், அந்த வருத்தத்தையெல்லாம் விரட்டிடுச்சு. கடைசியில அந்த வாழ்க்கை அவ்வளவு கோரமா மாறிடும்னு அப்போ எனக்குத் தெரியல'' என்ற பெட்ரிசியாவுக்கு, இப்போது குரல் தாழ்கிறது. தொடர்ந்தார்...

''கல்யாணம் ஆன ஒரு வாரத்துலயே ரெண்டு பேருக்கும் நடுவுல ஏகப்பட்ட பிரச்னை. அவரோட போக்கு எனக்குச் சுத்தமா பிடிக்கல. ரெண்டு வீட்டையும் எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் சோகத்தை சொல்லக்கூட ஆளில்ல. தினமும் நரக வேதனையா மாறிட்ட அந்த வாழ்க்கையில ஒரே ஆறுதலா மகன் பிறந்தான். அதுவரை மனக்கஷ்டம் மட்டுமே பார்த்திட்டிருந்த எனக்கு, அவரோட ஹோட்டல் நஷ்டத்துல மூழ்க, பொருளாதார கஷ்டமும் சேர்ந்துக்கிச்சு. பட்டினி கிடந்த நாளெல்லாம்கூட உண்டு. 'இந்த வாழ்க்கையே வேணாம்டா சாமீ'னு தற்கொலைக்குகூட முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்துல அம்மா வீட்டுக்கே போயிடலாம்னு முடிவு எடுத்தேன்'' என்றவரால், உடனடியாக ஓடிவிட முடியாதபடி வாட்டியெடுத்திருக்கிறது அவரின் மனசாட்சி.

''பூ மாதிரி பொத்திப் பொத்தி வளர்த்த எங்கப்பா, அம்மாவாவை, 'நீங்க எல்லாம் யாரும் வேண்டாம்... அவர் மட்டும் போதும்'னு அன்னிக்கு உதறினேன். அப்ப அந்த முடிவு அவங்களை எவ்வளவு சிதைச்சுப் போட்டிருக்கும்? என் தம்பி, தங்கைகளுக்கு எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும்? இந்தக் கேள்விகள் எல்லாம் என்னைத் துளைச்சு எடுக்க... குற்றம் குறுகுறுத்த நெஞ்சோடதான் எங்க வீட்டுக்குப் போனேன். ஆனாலும், என்னை அரவணைச்சுக்கிட்டாங்க எங்கம்மா'' என்றவருக்கு அங்குதான் விழுந்தது வளர்ச்சிக்கான புள்ளி.

''சின்ன வயசுலயே சமைக்கறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால என் வேதனைகள மறக்கிறதுக்காக ஸ்குவாஸ், ஜாம், ஊறுகாய்னு செஞ்சு பக்கத்து வீடு, தெரிஞ்சவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். என்னோட கைப்பக்குவம் எல்லாருக்கும் பிடிச்சுப்போக, அதுல வந்த வருமானத்தை மீண்டும் மீண்டும் முதலீடாவே போட்டேன். இதுக்கிடையில என் கணவர், 'புது வாழ்க்கைய ஆரம்பிப்போம்'னு நம்பிக்கை சொல்லி எங்கம்மா வீட்டுக்கு வந்து போக ஆரம்பிக்க, அப்படி எதுவும் நடந்துடாதாங்கற ஏக்கத்துல நானும் அவரை நம்பினேன். ஆனா, மறுபடி மறுபடி அது தொல்லையாவேதான் இருந்துது'' என்று நொந்து கொண்ட பெட்ரிசியாவுக்கு... குடும்ப நண்பர் ஒருவர் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வழி காண்பித்திருக்கிறார்.

''எங்க அப்பாவோட நண்பர் ஒருத்தர், 'பண்டங்கள் செஞ்சு மெரீனா பீச்சுல விற்பனை பண்ணிப்பாரேன்'னு சொல்ல, எனக்கும் சரினு பட்டுச்சு. ஆனா, எங்க வீட்டுல தயங்கினாங்க. 'நான் ஒரு கிராஜுவேட். கையில சமையலை விட்டா வேற தொழில் இல்ல. அதனால இதுதான் எனக்கான வழினு தோணுது.யாருக்கும் துரோகம் செய்யாம எந்தத் தொழில் செஞ்சாலும் தப்பில்லை'னு நான் உறுதியா நிக்க, எங்கம்மாவும் எனக்கு துணையா இருந்தாங்க'' என்றவர், அதற்குப் பின்தான் சந்தித்திருக்கிறார் தொழில் சிரமங்களை.

''காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்து டீ, சமோசா, கட்லெட்னு பத்து அயிட்டங்களை செஞ்சுட்டு வாக்கிங் வர்றவங்களுக்காக நாலு மணிக்கெல்லாம் பீச்சுக்கு போயிடுவேன். நைட் பதினொன்றரை மணி வரைக்கும் சுடச் சுடப் பதார்த்தங்கள் போட்டுகொடுத்து, வியாபாரம் பார்ப்பேன். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய கிடைச்சாங்க'' என்றவர்,

''அப்போதான் பக்கத்துல குடிசை மாற்றுவாரிய ஆபீஸ் கேன்டீன், நடத்த ஆள் இல்லாம சும்மா இருக்குனு கேள்விப்பட்டேன். நிறைய அலைச்சலுக்குப் பிறகு, அந்த கான்ட்ராக்ட்டை வாங்கினேன். பொறுப்பு கூடிப்போக, உழைப்பும் கூடுச்சு. ஆனா, மகன் பிரவீண், கைக்குழந்தையான எம் பொண்ணு பிரதீபா ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிட்டு, தினமும் ஐந்நூறு பேருக்கு சாப்பாடு, சனி, ஞாயிறுல மூவாயிரம் பேருக்கு சமையல்னு நாள் முழுக்க அடுப்புலயே கிடந்து வெந்தேன். ஆனாலும் சோர்ந்துடாம, அடுத்து என்னனு யோசிச்சேன். பேங்க் ஆஃப் மெஜூரா கேன்டீன் ஆர்டரையும் சிரமப்பட்டு வாங்கினேன்'' என்பவருக்கு அதன் பிறகு அடித்தது.... ஜாக்பாட்!

''உழைப்பு கூடின அளவுக்கு வருமானம் கூடாததால, கொஞ்சம் சோர்வா இருந்த எனக்கு, உத்தண்டியில இருக்கிற 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போர்ட் மேனேஜ்மென்ட்'ல கேன்டீன் கான்ட்ராக்ட் விடப்போறதா தகவல் கிடைச்சது. ஓடிப்போய் அந்த ஆபீஸரைப் பார்த்தேன். என்னோட எக்ஸ்பீரியன்ஸைக் கேட்டவரு, சிரிச்சுட்டு, 'எங்க கிச்சனை பார்த்துட்டு அப்புறம் பேசுங்க'னு கூட்டிட்டு போனாரு. கிட்டதட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி அவ்ளோ பெருசு, சொகுசு! ஆடிப்போயிட்டேன். இருந்தாலும், 'நம்புங்க... என்னால முடியும்'னு நான் அவங்கள மூணு மாசமா துரத்த, கிடைச்சது அந்த ஆர்டர்!'' என்பவர், அந்தச் சமயத்தில் கணவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்கிறார்.

''நாற்பது பேரை வேலைக்கு எடுத்தது, அந்தக் கேன்டீனுக்கு வர்ற கப்பல் கேப்டன்களுக்கு உணவுகள் சமைக்கக் கத்துக்கிட்டது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்களோட பழக்கமும், பயிற்சியும் கிடைச்சது, காலையில நாலு மணிக்கு எழுந்து மீன் மார்கெட், காய்கறி மார்கெட்டுக்கு எல்லாம் பஸ், ஆட்டோல போன நான் கார்ல போற அளவுக்கு முன்னேறினதுனு என் வாழ்க்கையில என் உழைப்புக்கான பலன்கள் எல்லாம் படிப்படியா கிடைக்க ஆரம்பிச்சது'' என்பவர், இதற்கிடையில் தன் மகனை நாட்டிகல் சயின்ஸ், மகளை விஸ்காம் என்று படிக்க வைத்திருக்கிறார். ஆனால், வெகு சீக்கிரமே மீண்டும் ஓர் இடியை இறக்கியிருக்கிறது விதி!

''பொண்ணு, படிப்பை முடிச்ச கையோட கல்யாணமும் முடிச்சேன். ஒருநாள் அவ கணவர், நாத்தனார் எல்லாரோடயும் திண்டுக்கல்ல இருந்து சென்னைக்கு வந்துட்டு இருந்தா, 'அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்'னு போன் பேசிட்டு வைச்ச கொஞ்ச நேரத்துல எனக்கு அடுத்த போன் வந்தது, என் பொண்ணு கார் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டானு'' எனும்போது கண்களை மீறி வழிகிறது நீர்! அதன்பிறகு அவர் முழுமையாக முடங்கிப் போக, தொழில் பளு எல்லாம், மகனின் தோளுக்கு மாறியது.

''வாழ்க்கையில எத்தனையோ துயரங்களப் பார்த்துட்டாலும், என் பொண்ணோட இழப்பை மட்டும் என்னால கடக்கவே முடியல. ஆனா, தொழிலுக்குப் புதுசான என் பையன் தொடர்ந்து தடுமாறுறதைப் பார்க்கவும், பெத்த மனசு கேட்கல. மறுபடியும் வேதனைகளையே வலுவாக்கி களத்துல இறங்கினேன். நாலு வருஷத்துக்கு முன்னால பிரதீபா சாண்ட்ராங்கற என் பொண்ணு பேரையே சுருக்கி 'சந்தீபா'ங்கர பேர்ல ஜி.என்.செட்டி ரோட்ல ஹோட்டல் ஆரம்பிச்சோம். உழைப்பக் கொட்டினோம். டி.டி.கே. ரோட்டுல கிளைய ஆரம்பிச்சோம். இன்னும் உழைப்பக் கொட்டினோம். இப்போ தரமணியில செயல்பட்டுட்டு வருது இன்னொரு கிளை...'' என்றவர்,

''திரும்பிப் பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு! தனியா லிஃப்ட்லகூட ஏற பயந்த என்னை, இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் மீறி, 'இதுவும் கடந்து போகும்'ங்கற நம்பிக்கையும், என் உழைப்பும்தான் ஜெயிக்க வச்சிருக்கு! இல்லையா..?!''

- எளிமையாகக் கேட்கிறார் அந்த வலிமை மனசுக்காரி!

அந்த ஆம்புலன்சுக்குப் பின்னால்!

தன் மகள் விபத்தில் சிக்கிய அச்சரப்பாக்கம் பகுதி-யில் தற்போது 'கார்டியன் ஏஞ்சல்' என்ற பெயரில் ஒரு ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்திருக்கிறார் பெட்ரிசியா. ''எம்பொண்ணு அடிபட்டப்ப... அவளுக்கு அந்த இடத்துல ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கல. ரெண்டு மணி நேரமா காப்பாத்த ஆளில்லாம ரோட்டு-லயே கிடந்துதான் அவ இறந்து போனா. அந்த வேதனையிலதான் மத்தவங்களுக்காக இலவச சேவையா அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி வச்சுருக்-கேன்'' என்று நெகிழ வைத்தார் பெட்ரிசியா.

=====================================================================================
Certainly, it is a very good example as to how a man or a woman who fell in an acute circumstance in life [whatever way it can be] can get back stregth and lead a purposeful and happy life.

'Bharatheeyan'

Tuesday, July 13, 2010

"எப்போதும் இன்புற்றிருக்க..."

எப்போதும் இன்புற்றிருக்க...

மகிழ்ச்சியை நோக்கியே உலகம் இயங்குகிறது. 'மகிழ்ச்சி கிடைக்காது' எனில், ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியமே இல்லை. வழியெல்லாம் வலி இருந்தாலும், முடிவில் இன்பம் இருக்கும் எனில் அந்தச் செயலைச் செய்யலாம் எனும் அடிப்படைத் தத்துவத்தில்தான், சாகசம் புரியவும் சாதனை படைக்கவும் மானுடம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது. அப்போது நேருகிற மரணத்தைக்கூட இன்பம் என்றெண்ணி மகிழ்கிறது.

மகிழ்ச்சியைக் களவாடுகிற உணர்ச்சி, கோபம். துக்கத்தில்கூட சிறிதேனும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், கோபத்தில் துளியும் மகிழ்ச்சி இருப்பது இல்லை. வயதானவர்களாக இருந்தாலும், அவர்களது மரணம் துக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் 'நல்ல சாவு' என மனம் கொஞ்சம் மகிழ்ச்சியுறும்; கோபம் அப்படிப்பட்டதல்ல!இந்த க்கான அருமையான கட்டுரை.

'பாரதீயன் - சந்தோஷம்'

துக்கம்- விரிசல்; கோபம்- பிளவு. துக்கம்- வெள்ளம்; கோபம்- ஆழிப்பேரலை. கோபம் வருகிறபோதும், அதைப் பாதுகாக்கிறபோதும், அதற்குப் பிறகு வெகுநேரம் அதையே எண்ணி, உடலின் ஒவ்வொரு அவயவமும் படபடக்கும்; இதயம் வேகமாக இயங்கும்; மூச்சு வாங்கும்; முகம் சிவக் கும்; நாக்கு வறளும்; நெஞ்சம் பதைபதைக்கும்; மலைமேல் ஏறும் மிதிவண்டிபோல நுரையீரல் திணறும். கோபம் மறைந்தாலும், அது ஏற்படுத்திய தடயங்கள் மட்டும் அப்படியே தங்கிவிடும்.

மேலாண்மை வகுப்புகளில், 'கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?' என இன்றைக்கு ஏகப்பட்ட வழிமுறைகளைச் சொல்லித்தருகின்றனர். ஏனெனில், அதிகாரிகளின் கோபத் தால், அலுவலக இயக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

சொந்த வாழ்வின் இயலாமை மற்றும் வெளியுலகில் எதிர்பார்த்தது நிகழாதது ஆகியவற்றால் கோபம் ஏற்படு கிறது. அந்த ஆற்றாமையானது, புலன்களின் வழியே வார்த்தைகளாக வழிந்தோடுகிறது. சின்னதொரு சம்பவத் துக்கே ஒடிந்துவிடுபவர்கள் உண்டு.

கணவன்- மனைவி மகிழ்ச்சியாக இருந்ததைச் சொல்ல மாட்டார்கள். என்றேனும் ஒருநாள், அவர்களின் புரிதல் பிசகானால், அவர்களின் கோபம் பூதாகரமாகக் கிளம்பி, பூகம்பங்களை ஏற்படுத்தும். 'இத்தனை நாள் எவ்வளவு அன்புடன் நடந்துகொண்டார்' எனப் பழைய சம்பவங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், அந்தப் பிறழ்வைப் பெரிதுபடுத்தாமல் சென்றுவிடலாம்.

உறவோ, நட்போ... ஒருவர் நம்மைக் காயப்படுத்தும்போது, அவர்கள் அன்புடன் நடந்துகொண்ட நிகழ்வுகளை நினைத்தால், நமது கோபமும் அதனால் ஏற்படும் உளைச்சலும் சமன் செய்யப்பட்டுவிடும். நாம் துன்பத்தில் இருந்தபோது அவர்களின் தோளில் சாய்ந்துகொண்ட நினைவுகளை எண்ணிப்பார்த்தால், அவர்கள் மீது வன்மம் ஏற்பட வாய்ப்புகளே இருக்காது. நெருக்கடி நேரங்களில் நம் அருகில் இருந்து ஆறுதல் சொன்ன அவர்களை ஒரு கணம் நினைத்தால், மனதில் மடிப்பு விழாது. முள் குத்தியதற்காகக் காலை வெட்டி எறிவதுபோல் நடந்துகொள்ளும் நமது செயல்கள் நமக்குப் புலப்படத் துவங்கும்.

நண்பர்களுக்குள் சின்னச் சின்ன வருத்தங்கள் வருவது இயல்புதான். வருத்தமே வராத உறவுகள் வலுவானவை அல்ல என்பதே உண்மை. மேம்போக்கான உறவுகளில், எப்போதும் புன்னகைதான். ஆழமான பகிர்தலில் அவ்வப் போது மூச்சுத் திணறுவதும் உண்டு. அவர்களைச் சமாதானப் படுத்துவது நமது கடமை. நல்ல நண்பர்கள் சின்ன காரணத்துக்காகப் பிரிகிறபோது, உலக உள்ளுணர்விலேயே ஒரு சுருக்கம் நிகழ்கிறது.

எனக்கும் நண்பர் ஒருவருக்கும், கல்லூரியில் படிக்கும்போது சின்ன மனத்தாங்கல். எங்களது மூத்த மாணவர் ஒருவருக்கு இந்த விஷயம் தெரிந்தது. எப்போதும் ஒன்றாகவே... தும்முவதைக்கூட தாளகதியில் செய்கிற எங்களின் பிணக்கு அவருக்கு வருத்தத்தைத் தர, ஒருநாள் என்னை அழைத்தவர், ''உன் நண்பர் உன்னைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார். உன்னிடம் பேச அவருக்கு ஆசை'' என்றார். மறுநாள் அவரது அறைக்கு, எங்கள் இருவரையும் தேநீர் அருந்த அழைத்தார். அதன்பிறகு எங்களின் நட்பு மீண்டும் மலர்ந்தது. இன்றுவரை, எங்களின் தொடர்பு ஜீவநதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று: புதிதாகத் திருமணமான தம்பதியிடம், மணப்பெண்ணின் தாய் பரிசுப்பொருள் ஒன்றைத் தந்தாள். பிரித்துப் பார்த்தால், அது அவர்கள் இருவரின் பெயரிலுமான வங்கிக் கணக்கு. தாய் சொன்னாள்: ''நீங்கள் இருவரும் எப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர்களோ, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவது போலான சம்பவம் எப்போதெல்லாம் நடக்கிறதோ, அந்த வேளையில், உங்களின் வங்கிக் கணக்கில் ஒருவர் பணம் போடவேண்டும். அதற்கான காரணத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தவறாமல் செய்யுங்கள். சேமிக்க இது ஒரு சிறந்த வழி!''

இரண்டு வருடங்கள் இனிதே கழிந்தது தாம்பத்தியம். எப்போதும் மகிழ்ச்சி, கும்மாளம், கொண்டாட்டம் எனப் போய்க்கொண்டு இருந்த மண வாழ்க்கையில், திடீரென இரண்டுபேருக்கிடையிலும் முளைத்தது கருத்துவேற்றுமை. 'இனி சேர்ந்து வாழ முடியாது' எனும் அறிவிப்பில் மட்டும் ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர். நீதிமன்றம் செல்லவும் துணிந்தனர். 'பரஸ்பர ஒப்புதல்' மூலம் விரைவில் மண முறிவு பெறலாம் என எண்ணினர்.

அந்தப் பெண், தாயாரிடம் சென்று சேதி சொன்னாள். ''இனி சேர்ந்து வாழமுடியாது என முடிவெடுத்தால், பிரிய வேண்டியதுதான். ஆனால் அதற்குமுன், உங்களது பங்கினைச் சரியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உங்களது இணைந்த வங்கிக் கணக்கில் உள்ள பணத்தில் நீ போட்ட பணத்தை நீயும், உன் கணவர் போட்ட பணத்தை அவரும் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றாள் தாயார்.

அதன்படி, பீரோவுக்குள் வைத்திருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். மனைவிக்கு மேல்படிப்பில் வெற்றி கிடைத்ததும் அவளின் பெயரில் 20,000 ரூபாய் போட்டிருந்தான் கணவன். மனைவிக்கு நல்ல வேலை கிடைத்ததும், 10,000 ரூபாய் போட்டிருந்தான். அதேபோல், கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்த தருணத்தில் அவன் பெயரில் 10,000 ரூபாய் போட்டிருந்தாள் மனைவி. இப்படியான பதிவுகள் மூலம், மொத்தம் 2 லட்ச ரூபாய் கணக்கில் இருந்தது.

ஒவ்வொரு பதிவிலும் அவர்கள் கொண்டாடிய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன. அப்போது இருவரும் நெருக்கமாக, அன்பாக, உயிருக்கு உயிராக உணர்ந்த நொடிகள் நிழலாடின. அவற்றை நினைக்க நினைக்கக் கண்ணீர் சுரந்தது. துணையை சிநேகத்துடன் உணரமுடிந்தது. பிரியப் போகிறோமே எனும் உண்மை உறுத்தியது.

'இவ்வளவு நெருக்கத்தையும் எப்படி நம்மால் தூக்கி எறியவும், மறக்கவும் முடிந்தது' என வருந்தினார்கள். இருந்தாலும் தன்முனைப்பு... 'பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்' எனக் கிளம்பிச் சென்றவன், ஒருமணி நேரத்தில் திரும்பி வந்தான். வங்கிக் கணக்குப் புத்தகத்தைப் பிரித்து மனைவியிடம் தந்தான். அதில் அன்றைய தேதியில், 'இருவரும் மறுபடி இணைந்ததற்காக' என்று எழுதி, 50,000 ரூபாய் செலுத்தப் பட்டிருந்தது.

தன்முனைப்பைச் சற்று தள்ளி வைத்தும், தேவையற்ற கோபத்தை ஒதுக்கி வைத்தும் வாழத் தெரிந்தால் மகிழ்ச்சி பொங்கும்; வருகின்ற கவலைகள் முகாமிடாமல் உடனே ஓடும்.

'நமது மகிழ்ச்சியைப் பலரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்; துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது' எனும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு. நண்பர்கள், நாம் பகிர்ந்து கொள் ளாமலேயே நமது துக்கத்தை உணர்வார்கள். அப்படி உணராதவர்கள் நண்பர்களே அல்லர். அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாததால் எந்தப் பாதிப்பும் இல்லை.

அடுத்தவரின் மகிழ்ச்சியைக் குலைப்பதற் காகவே வாழ்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், நம்மைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால், உடனே நம்மைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சேதியைக் கக்குவார்கள். நல்லவிதமாகப் பேசியிருந்தாலோ, தெரிவிக்கவே மாட்டார்கள். நம்மிடம் நெருங்குவதற்காக, தீயவற்றை மட்டும் வடிகட்டி வழங்கி, நமக்கு நெருக்கமானவர்களாக நடித்து ஏமாற்றுவர். அவர்களிடம் இருந்து தொலைபேசி வந்தாலே, 'ஏதோ கெட்ட சேதி' எனத் தெரிந்துகொள்ளலாம். அவர்களின் எண்ணை அலைபேசியில் பார்த்தாலே, நமக்கு நடுக்கம் வந்துவிடும்.

துன்பம் வரும்போது பக்குவத்துடன் எதிர் கொள்பவர், கோபப்படுவதில்லை. துன்பத்தைத் தனது சாமர்த்தியத்தால் கிள்ளி எறிந்துவிட்டு முன்னேறுவர். துன்பத்துக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமே, அதைப் பெரிதாக்குகிறது!
===================================================================================
இந்த generation-க்கான அருமையான கட்டுரை. Thanks to 'Iraianbu' and for Sakthi Vikatan.

'பாரதீயன் - சந்தோஷம்'