Wednesday, August 11, 2010

"பெண்ணே... ரிலாக்ஸ் ப்ளீஸ்! " ...சுவாமி சுகபோதானந்தா

[Thanks to Swamiji and the tamil magazine]

சுற்றமில்லா வாழ்க்கையில், சுழலும் 'ஈகோ யுத்தம்'!

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் தொடர்

அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஓர் இளம் தம்பதியைச் சந்தித்தேன். அந்தப் பெண்ணின் கணவருக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை. அழகாக ஒரு குழந்தை; புல்வெளிக்கு மத்தியில் ஒரு வீடு; மாமியார், மாமனார், நாத்தனார் என்று எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை; இருந்தாலும், அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு வாட்டம் இருந்தது... கண்களின் ஓரம் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

அவளின் கணவர், என் மாணவர்களோடு பேசிக் கொண்டிருக்க, கிடைத்த சின்ன இடைவெளியில் தன் மனதிலிருந்த பாரத்தை அந்தப் பெண் என்னிடம் இறக்கி வைத்தார்.

"அமெரிக்கால இருக்கோம்னுதான் பேரு சுவாமி... இத்தனை வருஷமாகியும் டிஸ்னிலாண்டு இல்ல, பக்கத்துல இருக்கற சிட்டிக்குகூட என்னை அவர் கூட்டிட்டுப் போனதில்ல. வீடு வாங்கியிருக்கோம்தான். ஆனா, அந்த வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர்கள்கூட வாங்கிப் போட முடியல. இவ்வளவு ஏன்... மளிகை சாமான்கள் தவிர ஷாப்பிங், அவுட்டிங்னு வேற எந்த செலவும் பண்றதில்ல. கேட்டா, 'வாங்கற சம்பளம் வீட்டுக்கு லோன் கட்டவே சரியாயிருக்கு'னு சொல்றாரு.

'சரி... அப்போ நான் வேலைக்குப் போறேன்'னு கேட்டா, வேண்டாம்ங்கறார். நான் வேலைக்கு போனாதான், நான் படிச்ச படிப்புக்கும், திரட்டியிருக்கற அனுபவத்துக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். இல்லைனா என் ஆற்றல், திறமைனு அத்தனை விஷயங்களோடயும் என்னை நானே மண்ணுல புதைச்சுக்கற மாதிரி தோணுது. இதைச் சொன்னா, அவரோட ரியாக்ஷன் மோசமா இருக்கு. என்னையும் என் குடும்பத்தையும் கேவலமா திட்டறார். இப்படி ஒரு வாழ்க்கைக்கா என் அப்பா, அம்மானு எல்லோரையும் பிரிஞ்சு இப்படி கடல் தாண்டி இவரோட கிடக்கறேன்?" என்று அந்தப் பெண் பேசப் பேச... அவள் கண்களிலிருந்து நீர் மளமளவென்று கொட்டியது.

அன்றே அந்தப் பெண்ணின் கணவனோடு தனிமையில் பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். மிக சின்ன வயதிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸில் டாக்டரேட் முடித்தவர். என்றாலும், அத்தனை எளிமையானவராக, 'மேன் வித் மைல்ட் மேனர்ஸ்' என்றிருந்தார் அவர்.

"ரூபாயில பார்த்தா நான் சம்பாதிக்கற டாலர் பெரிசா தெரியும். ஆனா, அந்த ஊர்ல சம்பாதிச்சு, அந்த ஊர்லயே செலவு செய்றதுல நான் வாங்கற சம்பளம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு. வீட்டுக்கு வாடகை கொடுக்கறதுக்கு பதிலா, நாமே சொந்தமா ஒரு வீடு வாங்கி, லோன் கட்டிடலாம்னு வீட்டை வாங்கினோம். இதுக்கிடையில ஒரு குழந்தையும் பிறந்துட்டதால... செலவுகள் கூடிடுச்சு.

ஏதாவது ஒரு எமர்ஜென்ஸினா நம்ம ஊர்ல தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்கனு நாலு பேர் இருப்பாங்க; சமாளிச்சுடலாம். அந்த ஊர்ல திடீர்னு ஒரு பெரிய பணத்தேவை வந்தா, யார்கிட்ட போறது? அதனாலதான் அங்க சேமிப்பு ரொம்ப அவசியம். அதுக்கு டூர், ஷாப்பிங்னு ஆடம்பரமான விஷயங்கள கட்டுப்படுத்திதானே ஆகணும்?! இது என் மனைவிக்கும் புரியுது. ஆனா, சில சமயங்கள்ல புரியாத மாதிரி நடந்துக்கறா.

அவ சண்டை போட்டு என்னை டென்ஷனாக்கினா, நான் எப்படி கிளாசுக்கு போய் பாடம் எடுக்க முடியும்? அந்த ஊர்ல ஒரு மணி நேரம் வகுப்பெடுக்க நாலு மணி நேரம் தயார் செய்யணும். இல்லைனா ஸ்டூடன்ட்சுக்கு முன்னால அவமானப்பட வேண்டியதுதான்.

இது புரியாம, 'காசுதானே வேணும்? நான் வேலைக் குப் போய் சம்பாதிக்கறேன்'னு கத்தறா. அவளை நான் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லல. கொஞ்சம் காத்திருந்து முயற்சி பண்ணி, நல்ல வேலைக்குப் போகட்டும்னுதான் சொல்றேன். எம்.பி.ஏ. படிச்சுட்டு, அவசரத்துக்கு சாதாரண சூப்பர் மார்க்கெட்ல யும், ரெஸ்ட்டாரன்ட்லயுமா வேலைக்குப் போறது?" என்று அந்த பெண்ணின் கணவர் தன் பங்குக்கு கோப மூட்டைகளை என் முன் அவிழ்த்தார்.

அவள் கணவர் என்ன நினைக்கிறார் என்பதை அந்தப் பெண்ணுக்கு தெரிவித்தபோது, "அதெல்லாம் சும்மா சுவாமி. நான் வேலைக்குப் போறது அவருக்குப் பிடிக்கலைங்கறதுதான் உண்மை. அதை நேரடியா சொன்னா, தன் சுயரூபம் தெரிஞ்சிடும்னு இப்படி என் மேல அக்கறை இருக்கறவர் மாதிரி காட்டிக்கறார்" என்று ஒரே போடாகப் போட்டார்.

"இப்படி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட்டா... நான் என்ன செய்றது? வேணும்னா அவ தன் வழியை பார்த்துட்டுப் போகட்டும்" என்று அமிலத்தை தெளித்த மாதிரி வார்த்தைகளை உதிர்த்தார் கணவர்.

சாந்தசொரூபியாக வந்த அந்தப் பெண்ணும், மெத்த படித்த மேதாவியாக தெரிந்த அந்த கணவரும் சற்று நேரத்திற்குள் தங்களின் இன்னொரு முகத்தை எனக்குக் காட்டியபோது... என் கண்களுக்கு அவர்களது மூன்று வயது குழந்தை மட்டுமே தெரிந்தது.

இவர்கள் இரண்டு பேருக்குமே தங்களின் பிரச்னை என்ன என்பதோ, அதைத் தீர்ப்பது எப்படி என்பதோ தெரியாமல் இல்லை. இரண்டு பேருக்கும் இடையே நடப்பது வெறும் ஈகோ யுத்தம் என்று சொல்லி பிரச்னையை நான் எளிமைப்படுத்தியும் பார்க்கவில்லை.

கணவன் - மனைவி இரண்டு பேருமே ஏராளமான மன அழுத்ததில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா, அம்மா, மாமியார், மாமனார், உற்றார், உறவினர் என்று சுற்றம்சூழ வாழும் நம்ஊரில்... கணவனும் மனைவியும் தங்களின் மன அழுத்தத்தை தங்களையும் அறியாமல் சுற்றத்தாரிடம் வெவ்வேறு வடிவங்களில் கொட்டிவிட சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஆனால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எந்த சொந்த பந்தங்களும், நெருங்கிய நண்பர்களும் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பமில்லை. அதனால், தங்களின் அத்தனை மனஅழுத்தங்களையும், வெறுப்புகளையும் வெளியேற்றும் வடிகாலாக ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது நன்கு புரிந்தது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? நாள்தோறும் யோகாவும் தியானமும் செய்தாலே நமது மூளையின் நரம்புகளில் முடிச்சு முடிச்சுகளாக அடைத்துக் கொண்டு நிற்கும் டென்ஷன்கள் அவிழும். மனசு ரிலாக்ஸாகும். உள்ளத்தில் அமைதி தவழும். பாதையில் வெளிச்சம் தெரியும். அமெரிக்க தம்பதிகள் என்பதால் இதை மட்டும் ப்ரிஸ்கிரிப்ஷனாக கொடுத்தால் ஏற்க மாட்டார்கள் என்பதாலும், முள்ளை முள் கொண்டுதான் எடுக்க வேண்டும் என்பதாலும்... 'செல்ஃப் மேட் மில்லியனர்ஸ்' என்ற அமெரிக்கப் புத்தக்கத்தை மேற்கோள் காட்டி அவர்களுக்கு சில ப்ரிஸ்கிரிப்ஷன்ஸ் கொடுத்தேன்.

அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்ற ஒரு மாதத்துக்குள் அங்கிருந்து எனக்கு சந்தோஷமாக போன் செய்தார்கள்.

'அப்படியென்ன ப்ரிஸ்கிரிப்ஷன் கொடுத்தீர்கள் சுவாமி?' என்கிறீர்களா... அதைத் தெரிந்து கொள்ள அடுத்த இதழ் வரை காத்திருங்கள்.
சிந்தனை செய் மனமே!

'கணவன் வேதனையோடு இருந்தால், மனைவி சந்தோஷமாக இருக்க முடியாது'

- மனைவிக்காக சொல்லப்படும் இந்த வாக்கியம் கணவனுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். ஏனெனில், இருவரின் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பின்னப்பட்டவைதானே!.
--------------------------
"bharatheeyan-santhosh"