[Thanks to Vikatan Group for this article in tamil.]
துன்பக் கடலில் தள்ளிய விதி... துடுப்பாக வந்த ஹோட்டல் தொழில்!
நினைத்துப் பார்க்காத திருப்பங்களும், தீர்மானிக்க முடியாத மேடு பள்ளங்களும் நிறைந்ததுதானே வாழ்க்கை?! பெட்ரிசியாவும் அப்படித்தான்!
காதலித்தவரையே ஆசையாக கை பிடித்தபோது, அந்த வாழ்க்கைதான் இதுவரை அனுபவித்திராத அத்தனை துன்பங்களையும் தனக்குத் தரப்போகிறது என்பதை அறியவில்லை பெட்ரிசியா. 'ஹோட்டல் முதலாளி மனைவி' என்று அந்தஸ்தோடு இருந்தவர், கணவரை விட்டுவிலகி, மெரீனா பீச்சில் டீ, சமோசா, கட்லெட் விற்கப்போகிறார் என்பதையும் காலம் முன்கூட்டியே அவருக்குச் சொல்லவில்லை.
ஆனால், அதையெல்லாம் மீறி, படிப்படியாக முன்னேறி குடிசை மாற்றுவாரிய அலுவலக கேன்டீன், பேங்க் ஆஃப் மதுரை கேன்டீன், நேஷனல் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் போர்டு மேனேஜ்மென்ட் கேன்டீன் என்று ஆர்டர் எடுத்து முன்னோக்கி வந்தபோது, மகளின் திடீர் மரணம் அவரை மீண்டும் சிதைத்துப் போடும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை.
என்றாலும், காலம் அவரை மெள்ளத் தேற்ற, மீண்டெழுந்து வந்து... இதோ... இன்று சென்னையின் முக்கிய இடங்களில் பரபரவென கமகமத்துக் கொண்டுஇருக்கும் 'சந்தீபா' ஹோட்டல்'களின் நிறுவனராக, கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சங்கள் அள்ளிக்குவிக்கும் தொழிலதிபராக அவர் உயர்ந்து நிற்கிறார். இப்படி அவர் உயர்வார் என்று, இதுநாள் வரை, அவரைத் துரத்திக் கொண்டே இருந்த விதி, நிச்சயமாக நினைத்திருக்காது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், பணக்காரத் தன்மையை காண்பிக்கும் பங்களாக்கள் உள்ள அந்தத் தெருவில்... பிரமாண்டமாக நிற்கிறது பெட்ரிசியாவின் பங்களா. எளிமையான புன்னகையுடன் ஆரம்பித்தார்...
''எங்க அப்பா, அம்மாவுக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை. நான், தம்பி, தங்கச்சிங்கனு ரொம்ப கட்டுப்பாடான, அதேசமயம், பாசமான குடும்பம் எங்களோடது. சென்னையில எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டலுக்கு என் ஃப்ரெண்ட்ஸோட அடிக்கடி சாப்பிடப் போவோம். காலம் அந்த ஹோட்டல் ஓனரை காதலிக்க வச்சது. ரெண்டு வீட்டுலயும் பயங்கற எதிர்ப்பு. அதை மீறி கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அப்போ பி.ஏ. செகண்ட் இயர் படிச்சுட்டிருந்த நான், ரொம்ப வருத்தத்தோட அதை டிஸ்கன்டினியூ பண்ணினேன். ஆனா, 'கணவரோட சேர்ந்து அழகான வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறோம்...'ங்கற சந்தோஷம், அந்த வருத்தத்தையெல்லாம் விரட்டிடுச்சு. கடைசியில அந்த வாழ்க்கை அவ்வளவு கோரமா மாறிடும்னு அப்போ எனக்குத் தெரியல'' என்ற பெட்ரிசியாவுக்கு, இப்போது குரல் தாழ்கிறது. தொடர்ந்தார்...
''கல்யாணம் ஆன ஒரு வாரத்துலயே ரெண்டு பேருக்கும் நடுவுல ஏகப்பட்ட பிரச்னை. அவரோட போக்கு எனக்குச் சுத்தமா பிடிக்கல. ரெண்டு வீட்டையும் எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் சோகத்தை சொல்லக்கூட ஆளில்ல. தினமும் நரக வேதனையா மாறிட்ட அந்த வாழ்க்கையில ஒரே ஆறுதலா மகன் பிறந்தான். அதுவரை மனக்கஷ்டம் மட்டுமே பார்த்திட்டிருந்த எனக்கு, அவரோட ஹோட்டல் நஷ்டத்துல மூழ்க, பொருளாதார கஷ்டமும் சேர்ந்துக்கிச்சு. பட்டினி கிடந்த நாளெல்லாம்கூட உண்டு. 'இந்த வாழ்க்கையே வேணாம்டா சாமீ'னு தற்கொலைக்குகூட முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்துல அம்மா வீட்டுக்கே போயிடலாம்னு முடிவு எடுத்தேன்'' என்றவரால், உடனடியாக ஓடிவிட முடியாதபடி வாட்டியெடுத்திருக்கிறது அவரின் மனசாட்சி.
''பூ மாதிரி பொத்திப் பொத்தி வளர்த்த எங்கப்பா, அம்மாவாவை, 'நீங்க எல்லாம் யாரும் வேண்டாம்... அவர் மட்டும் போதும்'னு அன்னிக்கு உதறினேன். அப்ப அந்த முடிவு அவங்களை எவ்வளவு சிதைச்சுப் போட்டிருக்கும்? என் தம்பி, தங்கைகளுக்கு எவ்வளவு அவமானம் ஏற்பட்டிருக்கும்? இந்தக் கேள்விகள் எல்லாம் என்னைத் துளைச்சு எடுக்க... குற்றம் குறுகுறுத்த நெஞ்சோடதான் எங்க வீட்டுக்குப் போனேன். ஆனாலும், என்னை அரவணைச்சுக்கிட்டாங்க எங்கம்மா'' என்றவருக்கு அங்குதான் விழுந்தது வளர்ச்சிக்கான புள்ளி.
''சின்ன வயசுலயே சமைக்கறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால என் வேதனைகள மறக்கிறதுக்காக ஸ்குவாஸ், ஜாம், ஊறுகாய்னு செஞ்சு பக்கத்து வீடு, தெரிஞ்சவங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். என்னோட கைப்பக்குவம் எல்லாருக்கும் பிடிச்சுப்போக, அதுல வந்த வருமானத்தை மீண்டும் மீண்டும் முதலீடாவே போட்டேன். இதுக்கிடையில என் கணவர், 'புது வாழ்க்கைய ஆரம்பிப்போம்'னு நம்பிக்கை சொல்லி எங்கம்மா வீட்டுக்கு வந்து போக ஆரம்பிக்க, அப்படி எதுவும் நடந்துடாதாங்கற ஏக்கத்துல நானும் அவரை நம்பினேன். ஆனா, மறுபடி மறுபடி அது தொல்லையாவேதான் இருந்துது'' என்று நொந்து கொண்ட பெட்ரிசியாவுக்கு... குடும்ப நண்பர் ஒருவர் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வழி காண்பித்திருக்கிறார்.
''எங்க அப்பாவோட நண்பர் ஒருத்தர், 'பண்டங்கள் செஞ்சு மெரீனா பீச்சுல விற்பனை பண்ணிப்பாரேன்'னு சொல்ல, எனக்கும் சரினு பட்டுச்சு. ஆனா, எங்க வீட்டுல தயங்கினாங்க. 'நான் ஒரு கிராஜுவேட். கையில சமையலை விட்டா வேற தொழில் இல்ல. அதனால இதுதான் எனக்கான வழினு தோணுது.யாருக்கும் துரோகம் செய்யாம எந்தத் தொழில் செஞ்சாலும் தப்பில்லை'னு நான் உறுதியா நிக்க, எங்கம்மாவும் எனக்கு துணையா இருந்தாங்க'' என்றவர், அதற்குப் பின்தான் சந்தித்திருக்கிறார் தொழில் சிரமங்களை.
''காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்து டீ, சமோசா, கட்லெட்னு பத்து அயிட்டங்களை செஞ்சுட்டு வாக்கிங் வர்றவங்களுக்காக நாலு மணிக்கெல்லாம் பீச்சுக்கு போயிடுவேன். நைட் பதினொன்றரை மணி வரைக்கும் சுடச் சுடப் பதார்த்தங்கள் போட்டுகொடுத்து, வியாபாரம் பார்ப்பேன். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய கிடைச்சாங்க'' என்றவர்,
''அப்போதான் பக்கத்துல குடிசை மாற்றுவாரிய ஆபீஸ் கேன்டீன், நடத்த ஆள் இல்லாம சும்மா இருக்குனு கேள்விப்பட்டேன். நிறைய அலைச்சலுக்குப் பிறகு, அந்த கான்ட்ராக்ட்டை வாங்கினேன். பொறுப்பு கூடிப்போக, உழைப்பும் கூடுச்சு. ஆனா, மகன் பிரவீண், கைக்குழந்தையான எம் பொண்ணு பிரதீபா ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிட்டு, தினமும் ஐந்நூறு பேருக்கு சாப்பாடு, சனி, ஞாயிறுல மூவாயிரம் பேருக்கு சமையல்னு நாள் முழுக்க அடுப்புலயே கிடந்து வெந்தேன். ஆனாலும் சோர்ந்துடாம, அடுத்து என்னனு யோசிச்சேன். பேங்க் ஆஃப் மெஜூரா கேன்டீன் ஆர்டரையும் சிரமப்பட்டு வாங்கினேன்'' என்பவருக்கு அதன் பிறகு அடித்தது.... ஜாக்பாட்!
''உழைப்பு கூடின அளவுக்கு வருமானம் கூடாததால, கொஞ்சம் சோர்வா இருந்த எனக்கு, உத்தண்டியில இருக்கிற 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போர்ட் மேனேஜ்மென்ட்'ல கேன்டீன் கான்ட்ராக்ட் விடப்போறதா தகவல் கிடைச்சது. ஓடிப்போய் அந்த ஆபீஸரைப் பார்த்தேன். என்னோட எக்ஸ்பீரியன்ஸைக் கேட்டவரு, சிரிச்சுட்டு, 'எங்க கிச்சனை பார்த்துட்டு அப்புறம் பேசுங்க'னு கூட்டிட்டு போனாரு. கிட்டதட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி அவ்ளோ பெருசு, சொகுசு! ஆடிப்போயிட்டேன். இருந்தாலும், 'நம்புங்க... என்னால முடியும்'னு நான் அவங்கள மூணு மாசமா துரத்த, கிடைச்சது அந்த ஆர்டர்!'' என்பவர், அந்தச் சமயத்தில் கணவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்கிறார்.
''நாற்பது பேரை வேலைக்கு எடுத்தது, அந்தக் கேன்டீனுக்கு வர்ற கப்பல் கேப்டன்களுக்கு உணவுகள் சமைக்கக் கத்துக்கிட்டது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்களோட பழக்கமும், பயிற்சியும் கிடைச்சது, காலையில நாலு மணிக்கு எழுந்து மீன் மார்கெட், காய்கறி மார்கெட்டுக்கு எல்லாம் பஸ், ஆட்டோல போன நான் கார்ல போற அளவுக்கு முன்னேறினதுனு என் வாழ்க்கையில என் உழைப்புக்கான பலன்கள் எல்லாம் படிப்படியா கிடைக்க ஆரம்பிச்சது'' என்பவர், இதற்கிடையில் தன் மகனை நாட்டிகல் சயின்ஸ், மகளை விஸ்காம் என்று படிக்க வைத்திருக்கிறார். ஆனால், வெகு சீக்கிரமே மீண்டும் ஓர் இடியை இறக்கியிருக்கிறது விதி!
''பொண்ணு, படிப்பை முடிச்ச கையோட கல்யாணமும் முடிச்சேன். ஒருநாள் அவ கணவர், நாத்தனார் எல்லாரோடயும் திண்டுக்கல்ல இருந்து சென்னைக்கு வந்துட்டு இருந்தா, 'அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்'னு போன் பேசிட்டு வைச்ச கொஞ்ச நேரத்துல எனக்கு அடுத்த போன் வந்தது, என் பொண்ணு கார் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டானு'' எனும்போது கண்களை மீறி வழிகிறது நீர்! அதன்பிறகு அவர் முழுமையாக முடங்கிப் போக, தொழில் பளு எல்லாம், மகனின் தோளுக்கு மாறியது.
''வாழ்க்கையில எத்தனையோ துயரங்களப் பார்த்துட்டாலும், என் பொண்ணோட இழப்பை மட்டும் என்னால கடக்கவே முடியல. ஆனா, தொழிலுக்குப் புதுசான என் பையன் தொடர்ந்து தடுமாறுறதைப் பார்க்கவும், பெத்த மனசு கேட்கல. மறுபடியும் வேதனைகளையே வலுவாக்கி களத்துல இறங்கினேன். நாலு வருஷத்துக்கு முன்னால பிரதீபா சாண்ட்ராங்கற என் பொண்ணு பேரையே சுருக்கி 'சந்தீபா'ங்கர பேர்ல ஜி.என்.செட்டி ரோட்ல ஹோட்டல் ஆரம்பிச்சோம். உழைப்பக் கொட்டினோம். டி.டி.கே. ரோட்டுல கிளைய ஆரம்பிச்சோம். இன்னும் உழைப்பக் கொட்டினோம். இப்போ தரமணியில செயல்பட்டுட்டு வருது இன்னொரு கிளை...'' என்றவர்,
''திரும்பிப் பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு! தனியா லிஃப்ட்லகூட ஏற பயந்த என்னை, இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் மீறி, 'இதுவும் கடந்து போகும்'ங்கற நம்பிக்கையும், என் உழைப்பும்தான் ஜெயிக்க வச்சிருக்கு! இல்லையா..?!''
- எளிமையாகக் கேட்கிறார் அந்த வலிமை மனசுக்காரி!
அந்த ஆம்புலன்சுக்குப் பின்னால்!
தன் மகள் விபத்தில் சிக்கிய அச்சரப்பாக்கம் பகுதி-யில் தற்போது 'கார்டியன் ஏஞ்சல்' என்ற பெயரில் ஒரு ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்திருக்கிறார் பெட்ரிசியா. ''எம்பொண்ணு அடிபட்டப்ப... அவளுக்கு அந்த இடத்துல ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கல. ரெண்டு மணி நேரமா காப்பாத்த ஆளில்லாம ரோட்டு-லயே கிடந்துதான் அவ இறந்து போனா. அந்த வேதனையிலதான் மத்தவங்களுக்காக இலவச சேவையா அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி வச்சுருக்-கேன்'' என்று நெகிழ வைத்தார் பெட்ரிசியா.
=====================================================================================
Certainly, it is a very good example as to how a man or a woman who fell in an acute circumstance in life [whatever way it can be] can get back stregth and lead a purposeful and happy life.
'Bharatheeyan'
Subscribe to:
Post Comments (Atom)
Hats off to that courageous woman. Congratualations. She asserts the Bharathiar's words "Uruthi koNda nenjinaay va,va, va!"
ReplyDelete"bharatheeyan"